திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களுக்கு அச்சம் நீக்குவதற்காக தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என உறுதியளித்தார்.
மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என ராதாகிருஷ்ணன் கூறினார்.