திருப்பூர் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்த 40 வயது ஆண் உடல் கருகி உயிரிழந்தார்.
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எலக்ட்ரானிக் கடை அருகே ஆண் சடலம் கருகிய நிலையில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் ஊரக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடல் கருகிய நிலையிலிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்தனர். இதில், அப்பகுதியில் ஆண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பீடி பற்றவைத்த போது அதில் இருந்து எழுந்த தீப் பொற்றியானது பெட்ரோல் கேன் மூலமாக அவரது உடல் முழுவதும் பரவியதும், இதன் காரணமாக அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. எனினும், அவர் யார், எந்த ஊர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.