திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கோவிந்தப்பேரியில் கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் மணிமண்டபம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் நினைவு மண்டபம் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சிலையை முதல்வர் பழனிசாமியும் திறந்து வைத்தனர்.
முன்னதாக இதில் பங்கேற்க சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பின்னர் அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு வந்தனர். அங்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மேலப்பாளையம் முதல் கருங்குளம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதையடுத்து திறந்த ஜீப் ஒன்றில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று வரவேற்பை ஏற்றனர். தொடர்ந்து மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்றனர்.