திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அருகே அரண்வாயல் தனியார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-1 இல் அடங்கிய துணை ஆட்சியர், துணைக்காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையாளர், கூட்டுறவு துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், தீயணைப்பு மற்றும் பேரிடர் துறைகளைச் சேர்ந்த பணிகளுக்கான தேர்வு மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 5132 பேர் பங்கேற்று தேர்வு எழுதுவதற்காக காலையில் முன்னதாகவே வந்து சேர்ந்தனர். அப்போது, கரோனா நோய்த்தொற்று தடுக்கும் வகையில் முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக தேர்வு மையத்தின் முன்புறத்தில் ஸ்கேன் செய்து கிருமி நாசினியும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், திருவள்ளூர் அருகே உள்ள அரண்வாயலில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரி மையத்தில் ஆட்சியர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மாவட்டத்தில் தேர்வு எழுத வந்தவர் அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தேர்வர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.