சென்னை: பொதுமுடக்கத்துக்குப் பின் இயங்கத் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 31.52 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 12.30 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரேர் ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை 31,52,446 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 83,813 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப் பயண அட்டை, இரு வழிப் பயண அட்டை, பல வழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 20% தள்ளுபடி அளித்து வருகிறது.
பயண அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 10 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும், பயணிகளின் வசதிக்காக அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.