சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அலுவலர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டபேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே மாதம் 2-ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரசார வியூகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அலுவலர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,’தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் திங்கள் நண்பகல் 12.30 மணியளவில் ஆலோசனை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.