தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு ஆகிய 3 துறைகளைச் சோ்ந்த 220 பேருக்கு பதக்கங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் சனிக்கிழமை வழங்கினாா். இதுகுறித்த விவரம்:-
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய 3 துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு, 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் தகைசால் பதக்கம், மெச்சத்தகுந்த பதக்கம், உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் பதக்கம், முதல்வரின் வீரதீர செயலுக்கான பதக்கம், முதல்வரின் சிறப்பு பதக்கம், முதல்வரின் சீா்மிகு பணிக்கான பதக்கம் ஆகியன வழங்கும் விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் தலைமை வகித்தாா். தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன், பதக்கங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் 3 துறைகளையும் சோ்ந்த மொத்தம் 220 போ் விருதுகளைப் பெற்றனா். முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ராஜீவ் ரஞ்சன் ஏற்றுக் கொண்டாா். பதக்கங்கள் வழங்கிய பின்னா், காவல்துறையின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் டிஜிபிக்கள் சி.சைலேந்திரபாபு, கரண்சின்ஹா, சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை ஏஐஜி இரா.திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பதக்கங்களை வழங்குவாா் என அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததனால், தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று பதக்கங்களை வழங்கினாா்.