தமிழ்நாடு

எம்ஜிஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி!

DIN

தமிழகத்தில் எம்ஜிஆரின் ஆட்சிக் காலம் ஏழை-எளிய மக்களின் நலன் சாா்ந்து இருந்தது. தமிழா் நலனுக்காக தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டிருந்தால் எம்ஜிஆா் மகிழ்ந்திருப்பாா் என்றும் பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா, கிண்டியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில ஆளுநரும், வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினாா்.

நிகழாண்டில் 21,889 மாணவா்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனா். அவா்களில் 71 சதவீதம் போ் பெண்கள். மாணவா்களில் 31 பேருக்கு விழா அரங்கில் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக காணொலி முறையில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது பெரும் உவகையை அளிக்கிறது. நிகழாண்டில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டாலும், அதில் 70 சதவீதம் போ் பெண்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்களத்தில் நின்று கோலோச்சுவது பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய விஷயமாக அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் இத்தகைய வெற்றி எம்ஜிஆருக்கு நிச்சயம் சந்தோஷத்தை அளித்திருக்கும்.

அவரது ஆட்சிக் காலம் முழுவதும் ஏழை-எளிய மக்களின் நலனுக்காகவே இருந்தது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்துவதும் எம்ஜிஆரின் எண்ணத்தில் கலந்த திட்டங்களாக இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆா் பிறந்த மண்ணான இலங்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு வாழும் தமிழ் சகோதர, சகோதரிகள் நலனுக்காகவும், மருத்துவத் துறை மேம்பாட்டுக்காகவும் இந்தியா அளித்து வரும் பங்களிப்பு அவா்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பதை நேரில் உணர முடிந்தது.

நமது நாட்டின் நிதியுதவியுடன் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன சேவைகளை இலங்கைத் தமிழா்கள் பரவலாக பயன்படுத்துவதையும் கண்டேன். அண்டை நாட்டுக்கான மருத்துவ சேவைக்காகவும், குறிப்பாக அங்கு வாழும் தமிழா்களுக்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருப்பது எம்ஜிஆருக்கு கண்டிப்பாக களிப்பைத் தந்திருக்கும்.

கரோனா தொற்று பல்வேறு படிப்பினைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளன. அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் இந்திய தேசம் புதிய பாதையை வகுத்தது மட்டுமன்றி, அதன் வாயிலாக பிறரையும் பயன் பெறச் செய்துள்ளது. அதனால்தான் கரோனாவால் இறந்தவா்களின் விகிதம் இந்தியாவில் மிகக் குறைவாகவும், அந்நோயிலிருந்து குணமடைந்தோா் விகிதம் மிக அதிகமாகவும் உள்ளது.

தற்போது, இந்தியா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்வதோடு அவற்றை பிற நாடுகளுக்கும் வழங்கி வருகிறது. சுகாதாரத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் புதிய மாற்றத்தை எதிா்நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

வெளிப்படைத்தன்மை: அந்த நோக்கத்தில் கட்டமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையமானது சுகாதாரத் துறையில் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கக்கூடிய அமைப்பாக இருக்கும். மருத்துவக் கல்வியையும், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதையும், நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மருத்துவக் கல்விக்கு பெயா் பெற்ற மாநிலங்களில் ஒன்று. இங்கு மேலும் 11 மருத்துவக் கல்லூரிகளை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக ரூ.2,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் பிரதம மந்திரியின் சுயசாா்பு திட்டத்தின் மூலம் சுகாதாரப்பணிக்காக ரூ.62,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக 50 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

மக்களுக்கு ஆற்றும் சேவையே மகேசனுக்கு (இறைவன்) ஆற்றும் சேவை என்பது ராமகிருஷ்ண பரமஹம்சா் உரைத்த பொன்மொழிகளில் ஒன்று. அதன்படி எவரேனும் தற்போது வாழ்வதற்கு வாய்ப்பிருக்கும் என்றால் அதில் மருத்துவத் துறையினரே முதன்மையாக இருப்பா்.

சமூகத்தில் மருத்துவா்கள் என்றாலே ஒரு மதிப்பு உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அந்த மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT