தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் சென்னையில் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் அரசு சார்பில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தேர்தலைக் காரணம் காட்டி கைவிடப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.