தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் இருந்து பெங்களூரு செல்லும், அரசு பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சேலம் கோட்டம், அரசு போக்குவரத்து கழக பேருந்து, தம்மம்பட்டி கிளையில் இருந்து, தினமும் இரவு 10.10 மணிக்கு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களுருக்கு இயக்கப்படுகிறது. திருச்சி,பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து ஓசூர், பெங்களூரு செல்பவர்கள். தம்மம்பட்டியில் இருந்து புறப்படும், இந்த பேருந்தில்தான் அதிகம் செல்வார்கள். இந்த பேருந்து தம்மம்பட்டியில் இருந்து வாழப்பாடி, சேலத்திற்கு செல்லும் கடைசி பேருந்து என்பதாலும், அந்த வழியாக உள்ள சிறுசிறு ஊர்களுக்கான " கட் சீட்டுகள் " அதிகம் இருக்கும் என்பதாலும், தம்மம்பட்டி கிளையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளிலேயே, கட்டண வசூலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, பெங்களூரு பேருந்துக்காக பெண்கள், குழந்தைகள் என 60-க்கும் மேற்பட்டோர், இரவு 9.30 மணியில் இருந்து காத்திருந்தனர். ஆனால், 10.30 மணியாகியும், தம்மம்பட்டி பேருந்து நிலையத்திற்கு பெங்களூருக்கு செல்லும் அரசு பேருந்து வரவில்லை. தம்மம்பட்டி பணிமனைக்கு, பயணிகள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த பேருந்துக்கான நடத்துநர், வெள்ளிக்கிழமை பணிக்கு வராததால் பேருந்து ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
வசூலில் முதல் இடத்தில் உள்ள, அந்த பேருந்தை இயக்க, தம்மம்பட்டி கிளை நிர்வாகம், மாற்று ஏற்பாடு செய்யாததால், காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பயணிகள், அவ்வழியே, ஆத்தூர் சென்ற சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர்.