சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியான ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று (25.2.2021) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரராஜ் மனைவி செல்வி, செல்லையா மனைவி ஜோதி, ரத்தினசாமி மனைவி சந்திரா, அழகர்சாமி மனைவி லட்சுமியம்மாள் மற்றும் பொன்னுசாமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெடி விபத்தில் 19 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.