திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை காலமுறை ஊதியம் பணியிட பாதுகாப்பு சுழற்சி முறையில் பணியிடமாறுதல் விற்பனை நேரம் குறைப்பு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வியாழக்கிழமை திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு செயலர் எல்.சரவண பெருமாள் தலைமை வகித்தார். எல்பி எஃப் டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர்சந்திரன், சிஐடியு டாஸ்மாக் மாநிலக் குழு உறுப்பினர் சிவன் ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். எல்பி எஃப் மாவட்டத் தலைவர் எம் சுப்பிரமணியன், சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பி மாரியப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
எல்பி எஃப் அமைப்புச் செயலர் தர்மன், சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியூ டாஸ்மாக் மாவட்ட பொருளாளர் சி. இளமுருகு நன்றி கூறினார்.