நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
பின்னர் ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்'' என்ற திருக்குறளையும் தமது உரையில் மேற்கோள் காட்டினார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது,
தொழில் வளர்ச்சியில் தமிழகத்திற்கு முக்கியப் பங்கு:
தொழில் நகரமான கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுகிறது. பவானி சாகர் அணையை விரிவுபடுத்தும் திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவர்.
65%-க்கும் அதிகமான மின்சாரம் தமிழகத்திற்கே:
தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையானது தடையில்லா மின்சாரம். புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் தமிழ்நாட்டிற்கே பயன்படும்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு பகுதியில் சாகர் மாலா திட்டத்தின் கீழ், சரக்கு வாகன நிறுத்தப் பூங்கா தொடங்கப்படவுள்ளது.
தமிழகம் நகர்மயமாகும் மாநிலம்:
கடல்சார் வணிகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி குறித்த பாரம்பரியம் கொண்டது தமிழகம். கப்பல் போக்குவரத்தில் வ.உ.சிதம்பரனாரின் தொலைநோக்குப் பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
வளர்ச்சியை உறுதி செய்வதே அனைவருக்கும் வீடு என்பதாகும். வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். தமிழகம் அதிக நகர்மயமாகும் மாநிலமாக உள்ளது. நகர்புற வளர்ச்சியில் அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன.
தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று பிரதமர் கூறினார்.