ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதனால் பேருந்துகள் இயங்காது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்கக் கூடாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று தெரிவித்து இருந்தனர்.
இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை அடுத்து சேலத்தில் வியாழக்கிழமை அதிகாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து பணிமனைகளுக்கும் சென்று வழக்கம்போல பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து அனைத்து பணிமனைகளில் இருந்து அதிகாலை 4 மணி முதல் வழக்கம்போல அரசு பேருந்துகள் செல்லத் தொடங்கியது.
சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து எப்போதும் போல பேருந்துகள் சென்று வருகிறது.
பேருந்து நிலையங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
சேலத்தில் இருந்து கோவை, பெங்களூர், சென்னை, வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் சென்று வருகிறது .
இது குறித்து சேலம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அனைத்து பணிமனைகளில் இருந்தும் வழக்கம்போல பேருந்துகள் சென்று உள்ளது.
இதனால் சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் ஏதும் நடக்கவில்லை. வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.