சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிதாக அமைக்கப்பட உள்ள உணவுப் பூங்காவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
சென்னை மாவட்ட மக்களுக்கு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், நுண்ணுயிர் உரங்கள் அடங்கிய காய்கறி தளைகள், அழகு மற்றும் தொட்டிச் செடிகள், இயற்கை உரங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட தோட்டக்கலைப் பொருள்கள் போன்றவற்றை மக்களுக்கு வழங்கிட தனி கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கட்டப்பட்ட இந்த கிடங்கினை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பில் உணவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்தப் பூங்காவில் உணவுப் பொருள் சோதனை ஆய்வகம், 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, சிப்பம் கட்டும் மையம் போன்ற கட்டமைப்புகளும் அமைக்கப்பட உள்ளன.
விருதுகள்: பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது' மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதானது ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 காசோலைகள், சான்றிதழ்களைக் கொண்டது.
இந்தப் பரிசு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ.சிவராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.