சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, 3 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியின் வாக்காளர் சந்தானகுமார் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கை அவர் வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்பி கனிமொழி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்குகளின் விசாரணையை, 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.