திருநெல்வேலி: தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருநெல்வேலி கோட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயங்கின.
14 வது ஊதிய ஒப்பந்தந்தத்தை தமிழக அரசு இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றுமுதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
இந்நிலையில், திருநெல்வேலி கோட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மூன்று மண்டலங்கள் உள்ளன. இதில், மொத்தம் 1300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் கூட்டணி சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக திருநெல்வேலி கோட்டத்தில் 50 சதவீத பேருந்துகளே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் 25 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.