சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
வளர்பிறை பிரதோஷத்தையொட்டி காலையில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் பக்தர்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறிச் சென்றனர். கோயில் வளாகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனர்.
இதே போல் சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூத்தாழீஸ்வரர் சுவாமிக்கும் பிரதோஷநாதர், ஸ்படிக லிங்கம் மற்றும் நந்திபெருமானுக்கும் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன.
இதில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.