சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தோழி சசிகலா, தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் நீங்கள் உண்மைத் தொண்டர்கள். நிச்சயமாக இதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்குத் துணை இருப்பேன். இதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று சசிகலா தெரிவித்தார்.
மேலும், நான் விரைவில் நமது தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
இதனிடையே இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் அமீர், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் சசிகலாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே தங்கியுள்ளார். தமிழகம் திரும்பும் வழியில், அவருக்கு வரவேற்பு அளித்த மக்களிடையே கூறிய அதேக் கருத்தையே இன்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.