ஜெயலலிதா கோயிலில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கட்சியினர் அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக மதுரை மாவட்டம் டி. குன்னத்தூரில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கட்டியுள்ள கோவிலில் அவர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
பின்னர் 'உயிர் மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும் மக்களுக்கான இந்த அண்ணா- திமுக இயக்கத்தையும் காப்போம் எனவும் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்க்கட்சியினரை தோற்கடித்து வெற்றி பெறுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.