தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையர் ம.வெங்கடேசன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
மத்திய அரசு கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப்பின் ஒரு தமிழரை தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையராக நியமித்திருப்பது பெருமையளிக்கிறது. மனித கழிவுகளை அகற்றக் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பணிசெய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மனித கழிவுகளை அகற்றப் பயன்படுத்தும் இயந்திரம் வாங்க 50 சதவீதம் மானியத் தொகையாக வழங்கப்படும்.
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது என்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல தமிழகத்திலும் தூய்மைப் பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். மேலும் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் இறப்பு குறித்தும் விசாரணை செய்யப்படும் என்றார்.