சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்த செய்யப்படுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 5.2.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுப்பூர்வமான போராட்டம். இந்தப் போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர். இந்தப் போராட்டங்களின் போது, சட்டம்-ஒழுங்கினை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. எனினும் சில விரும்பத் தகாத சம்பவங்கள் இந்தப் போராட்டங்களின்போது நடந்துவிட்டன.
இந்த வழக்கிற்குள் உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில்கொண்டு, இந்தப் போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற சட்டப்பூர்வமாக திரும்பப் பெற முடியாத ஒரு சில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை, சட்ட வல்லுநர்கள் ஆலோசனையைப் பெற்று, எனது தலைமையிலான அரசு திரும்பப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தற்பொழுது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.