சென்னை: சென்னை விமான நிலையத்தில் தலைவர்கள் பெயர்கள் அகற்றப்பட்டதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், அயல்நாட்டு விமான முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களாக இன்றைக்கும் விளங்குகிற பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை விமான நிலையங்களிலிருந்து அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயலாகும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த இருபெரும் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கின்ற வகையில் அலட்சியப் போக்கோடு, சூட்டப்பட்ட பெயர்களை அகற்றிய மத்திய பா.ஜ.க. அரசு, உடனடியாக அந்த பெயர்கள் இடம் பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி திரும்ப பெயர்களை இடம் பெறச் செய்கிற வகையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை மத்திய பா.ஜக. அரசு சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.