விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலுள்ள குண்டாற்றில் முன்னோர்க்கான திதி, தர்ப்பணம் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்திட நிழல்மண்டபம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாகப் பக்தர்கள் சார்பில் புகார் எழுந்துள்ளது.
திருச்சுழி குண்டாற்றுப்படுகையில் இராமேஸ்வரத்தைப்போல இறந்தோருக்கும் முன்னோருக்கும் திதி, தர்ப்பண சமயச்சடங்குகள் செய்வது திருச்சுழி மட்டுமல்லாது அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் பாரம்பரிய வழக்கமாகும்.
குறிப்பாக தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாள்களில் மிக அதிக பக்தர்கள் இங்குள்ள குண்டாற்றிற்கு வந்து சமயச்சடங்குகள் செய்வது வாடிக்கை. ஆனால் இங்கு நிழல்மண்டபம் இல்லாததால் பக்தர்கள் சுடும் வெயிலில், மணலில் அமர்ந்து சமயச்சடங்குகளைச்செய்ய நேர்வதால் அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும், மின்மோட்டாருடன் கூடிய சுகாதார வளாகம் இல்லாததால் பெண் பக்தர்கள் குளிக்க, உடை மாற்ற அறை ஏதுமின்றித் தவிக்கின்றனர். மேலும் கழிப்பிட வசதியின்றியும் அல்லல்படுகின்றனர். இதுதொடர்பாக பக்தர்களின் குறைகளுக்கு திருச்சுழி ஊராட்சித்தரப்பு யாதொரு நடவடிக்கையும் செய்யாததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே குண்டாற்றங்கரையில் நிழற்கூடம், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவேண்டுமெனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.