சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மீதான அக்கறை அதிகரித்து, கோடை வெயிலுடன் தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் தான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று ஸ்டாலின் ஒரு பக்கம் வாக்குறுதிகளை கொடுத்து வரும் நிலையில், ஆட்சியில் இருக்கும் அதிமுகவோ, ஒருபடி மேலேச் சென்று மக்கள் பயன்பெறும் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் திரும்பப் பெறுவது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் போன்றவையும் உள்ளடங்கும்.
இவ்வாறு அதிமுக - திமுக இடையே தேர்தல் பிரசாரம் களத்திலும், சமூக வலைத்தளத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில், சுட்டுரைப் பக்கத்தில், அதிமுக - திமுக இடையே நடக்கும் சில சுவாரஸ்ய மோதல் பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
தமிழக முதல்வர் தனது சுற்றுப் பயணத்தின் போது விவசாய நிலத்தில் இறங்கி விவசாயிகளுடன் பேசியதையும், ஸ்டாலின், வயல் வெளியில் இறங்கி நடந்துச் சென்றதையும் அதிமுக சுட்டுரைப் பக்கத்தில் ஒப்பிட்டுப் போடப்பட்டிருந்தது.
அடுத்து, திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்ததையும், கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்ததையும், திமுக எம்.பி. கனிமொழி தனது சுட்டுரையில் ஒப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த சுட்டுரைப் பதிவை அதிமுக அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் டேக் செய்து "அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்." என்று பதிவிடப்பட்டுள்ளது.
உடனடியாக அதனை மீண்டும் டேக் செய்த கனிமொழி, "வெற்று நாயகன் இல்லை. அடிக்கல் நாயகனான உங்களை வழிநடத்தும் வெற்றி நாயகன்." என்று பதிவிட்டுள்ளார்.
இதோடு நின்றுவிடவில்லை.. இதனை தங்களுக்குக் கிடைத்த பாராட்டாக அதிமுக எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு பதிலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒருவர் செய்த பதிவை மற்றொருவர் டேக் செய்து கருத்துகளை பதிவிட்டு, சுட்டுரையில் கருத்துப்போர் நடந்து கொண்டிருக்கிறது.