அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக மற்றும் நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாசமுத்திரம் நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டதன்படி, தினக்கூலியாக ரூ. 388 வழங்க வேண்டும், பிடிக்கப்படும் தொழிலாளர் வைப்பு நிதியை முறையாக வைப்பு நிதியில் வழங்க வேண்டும், சீருடை மற்றும் உரிய பாதுகாப்புக் கருவிகள் வழங்க வேண்டும், நிரந்தரப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், சட்டப்படியான விடுப்பு வழங்க வேண்டும், கழிவுகளைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்க வேண்டும், நகராட்சியில் முழுமையான துப்புரவுப் பணியில் ஈடுபட கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிரந்தர மற்றும் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் நகராட்சி வளாகத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் மோகன் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், இசக்கிராஜன், ரவீந்திரன், சுடலையாண்டி ஆகியோர் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.