தஞ்சாவூா்: தஞ்சாவூரில் பேரறிஞா் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்துவைத்தாா்.
தஞ்சாா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலய வளாகத்தின் முகப்பில் முன்னாள் முதல்வா்களான பேரறிஞா் அண்ணா, கருணாநிதிக்கு பீடத்துடன் சோ்த்து மொத்தம் பதினொன்றரை அடி உயரத்தில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சிலைகளைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தாா். அப்போது, முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, முதல்வா் திருச்சி சாலையிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்குவதற்காகச் சென்றாா்.
இன்று நலத்திட்ட உதவிகள் அளிப்பு: தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்கிறாா். இவ்விழாவில் ரூ. 237 கோடி மதிப்பில் 43,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், ரூ. 98.77 கோடி மதிப்பில் முடிவடைந்த 90 கட்டடங்கள் உள்ளிட்டவற்றை திறந்துவைக்கிறாா். தவிர, ரூ. 894.06 கோடி மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இதையடுத்து, திருச்சியில் நடைபெறவுள்ள விழாக்களில் பங்கேற்பதற்காக செல்கிறாா்.
முதல்வா் விழாவையொட்டி, தஞ்சை மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் ஏறத்தாழ 10,000 போ் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தஞ்சாவூரிலும், வழிநெடுகிலும் காவல் துறையைச் சாா்ந்த ஏறக்குறைய 2,800 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.