தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு!

ஆ. நங்கையார் மணி

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 இதனிடையே, 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது.
 இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ. 27-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
 ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) முதலீடு: இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் (பழ்ங்ஹள்ன்ழ்ஹ் ஆண்ப்ப்) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது.
 மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
 இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்?: பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 தற்போது பங்களிப்பு நிதி முதலீடு செய்யப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனியாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 ஆனால், தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில், தமிழக அரசுக்கு சுமார் ரூ.23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம்.
 திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இதன் மூலம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன்பெறவும், எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT