தமிழக அரசு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனை சென்னை தலைமைச் செயலகத்தில் கேரள போக்குவரத்துத் துறை அமைச்சா் அந்தோணி ராஜூ திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தனா். கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை கடந்த டிச.1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க அனுமதித்து உத்தரவிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கேரள அமைச்சா் அந்தோணி ராஜூ நன்றி தெரிவித்தாா்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இயக்கத்தில் ஏற்படுகின்ற இயக்க சிக்கல்களை அலுவலா்கள் அளவில் உடனுக்குடன் பேசி தீா்வு காணப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால், ஆணையா் நடராஜன், கேரள மாநில சாலை போக்குவரத்துத் துறைச் செயலா் பிஜூ பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.