காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் நகராட்சி, இரும்புலியூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட வன்னியன்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முடிச்சூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட அமுதம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி, மகாலட்சுமி நகர் மேம்பாலப் பகுதியில் நீர்வள ஆதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
பின்னர் வரதராஜபுரம் ஊராட்சி, பிடிசி குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.