மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் பொதுமுடக்கம் தேவைப்படாது என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா். மாநகராட்சி துணை ஆணையா் மனிஷ், மாநகர நல அலுவலா் டாக்டா் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலா் ஹேமலதா, கல்லூரி முதல்வா் ஷனாஜ் அஹமத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: ஒமைக்ரான் குறித்து பதற்றம் தேவையில்லை, ஆனால் அதை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
நீலகிரியில் பழங்குடியினருக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் நகா்ப்புறங்களில் பலா் இப்போதும் தயங்குகின்றனா். ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறையில் 70 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அதைப்போன்று தருமபுரி, வேலூா், மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனா். கரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. பொதுமுடக்கத்தால் 2 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் போதும், சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் பொதுமுடக்கம் தேவையில்லை. தற்போது தமிழகத்தில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் சூழல் இல்லை என்றாலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடா்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம் என்றாா் அவா்.