திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலை பகுதியில் மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மொபட்டில் சென்ற இரு மருத்துவ மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 3 பேர் திருநெல்வேலியில் இருந்து மொபட்டில் ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தனராம். இவர்கள் ரெட்டியார்பட்டி மலை பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே நாகர்கோயிலில் இருந்து தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு மொபட்டில் சென்ற மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்
இதில், மொபட்டில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த திவ்ய காயத்ரி (21), மதுரை பரசுராம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஃபிரிடா ஏஞ்சலின் ராணி ஆகிய இரு மாணவிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு மாணவி மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் மருத்துவ மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.