காஞ்சிபுரம்: பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் குஜராத் மாநிலம் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை காஞ்சி சங்கராச்சாரியார் புதன்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
ஆதிசங்கரர் ஸ்தாபித்த பீடங்களில் ஒன்றான குஜராத் மாநிலம் துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜ்(98)உடல்நலக் குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரது சீடர்கள் காஞ்சி காமகோடி பீடத்தை தொடர்பு கொண்டு அவரது உடல் நலனுக்காக காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்தும்,ஹோமங்கள் நடத்தியும் பிரசாதம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, அவருக்கு பிரசாதம் காஞ்சி சங்கர மடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த துவாரகா மடத்தின் பீடாதிபதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இருவரும் நீண்ட நேரம் இந்து தர்மம் குறித்து கலந்துரையாடினார்கள்.
விஜயேந்திரருடன் உடன் வந்திருந்த பக்தர்களையும் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஆசிர்வதித்தார்.
இதையும் படிக்க | நீதித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
இந்நிகழ்வின் போது காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாதசாஸ்திரி, மேலாளர் ஜானகிராமன், வழக்குரைஞர் கன்னாட்டி. பாலசுப்பிரமணியம், காரைக்காலைச் சேர்ந்த தணிக்கையாளர் கணபதி சுப்பிரமணியம், ராமேசுவரம் அனந்த பத்மநாப சாஸ்திரிகள் மற்றும் சங்கர மடத்தின் மூத்த சிஷ்யர்கள் உள்பட பலரும் உடன் இருந்தனர்.
இத்தகவலை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.