கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 4 படகுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மீனவர்களிடையே ஏற்படும் தொழில் தகராறுகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடல் சார் மீன்பிடி தொழிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், விசைப்படகுகள் மூலமாக மீன்பிடிப்போர் காலை 5 மணிக்கு தங்குதளத்தில் இருந்து புறப்பட்டு மீன்களை பிடித்துக் கொண்டு மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த, உத்தரவு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர்.
அப்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வந்து சென்றதாக முதுநகரைச் சேர்ந்த இப்ராஹிம் மகன் கமால் (38), தைக்கால்தோணித் துறையைச் சேர்ந்த அ.பிரசாத் (45), பெரிய குப்பத்தைச் சேர்ந்த அ.மூர்த்தி (42), தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த கோ.சீத்தாராமன் ஆகிய 4 பேர் மீது கடல்சார் மீன்பிடி ஒழுங்குப்படுத்துதல் சட்ட விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலமாக 4 படகின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர்களது படகுகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்திற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.