சென்னை: தமிழக காவல்துறையில் 1,120 காவலா்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல்துறையில் மண்டலம் விட்டு மண்டலம், சரகம் விட்டு சரகம், மாவட்டம் விட்டு மாவட்டம் பணிபுரியும் காவலா்கள் தங்களது சொந்த ஊா் அருகேவும், குடும்ப சூழ்நிலையின் காரணமாக சொந்த மாவட்டத்திலும், மருத்துவ காரணத்துக்காக சொந்த ஊரிலும் பணிபுரிய பணியிட மாற்றம் கேட்டு வந்தனா். இந்தப் பணியிட மாற்றங்களை செய்யும் அதிகாரம் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி-க்கு மட்டும் உள்ளது.
இவ்வாறு பணியிட மாற்றம் கேட்டு வந்த காவலா்களின் விண்ணப்பங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன. சில காவலா்களின் விண்ணப்பங்கள் மட்டும் அவ்வப்போது பரிசீலனை செய்யப்பட்டு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கிடப்பில் இருந்த காவலா்களின் பணியிட மாற்ற விருப்ப விண்ணப்பங்களை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு பரிசீலித்தாா்.
இதில் தகுதி உடைய 1,120 முதல்நிலைக் காவலா்கள், காவலா்கள் ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்து புதன்கிழமை அவா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலா்கள், அவா்கள் கேட்ட மாவட்ட, மாநகர காவல்துறைகளுக்கு மாற்றப்படுவாா்கள். அங்கிருந்து காலிப்பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள்.