வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி நிர்வாகம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, சர்வதேச உரிமைகள் கழகம், நிழல்கள் அறக்கட்டளை சார்பில் கரோனா விழிப்புணா்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊர்வலத்துக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். முத்தூர் சாலை, நான்கு சாலைச் சந்திப்பு, தாராபுரம் சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது.
அப்போது பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கரோனா தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.