வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் வியாழக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ப.வாசுதேவன்(50). வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார்.
புதன்கிழமை இவருக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அனைத்து தரப்பு பணியாளர்களிடம், மென்மையாக பழகும் தன்மை கொண்ட வாசுதேவன் திடீரென மரணம் அடைந்தது ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இவரது மறைவிற்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள் ஒருங்கிணைந்து வியாழக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை பணியாளர்களுக்கும், பல்வேறு சலுகைகளை பெற்றுத் தர, தன்னலம் பாராமல் உழைத்த வட்டார வளர்ச்சி அலுவலர் ப.வாசுதேவன் மறைவு, இவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கும் பெரிழப்பை ஏற்படுத்தி உள்ளதென, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகி ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.