மே 2-ல் தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே தபால் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதிதான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மே 1ஆம் தேதி தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக தலைமைக்கு கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையில் மேஜைகளை குறைக்கக் கூடாது. கடந்த கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.