புதுச்சேரி: புதுவையில் ஒரே நாளில் புதிய உச்சமாக 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவையில் வியாழக்கிழமை 4,675 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 837 பேருக்கும், காரைக்காலில் 89 பேருக்கும், மாஹேவில் 40 பேருக்கும், ஏனாமில் 21 பேருக்கும் என மொத்தம் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மருத்துவமனைகளில் 1,107 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,816 பேரும் என மொத்தம் 5,923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,580 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 726 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 43,931 ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 987 பேருக்கு கரோனா தொற்று என்பது இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாகும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளை கழுவுவதுடன், தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டுமென புதுவை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.