சென்னை: கரோனா தடுப்பூசிகளின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ. 150-க்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கான விலையை ரூ.400-க்கு உயா்த்தியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. விலை உயா்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் ஆபத்து மிகுந்ததாக இருக்கிறது.
மே 1-இலிருந்து 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்றும், மீதியுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளுக்கு அந்தத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே ரூ.4500 கோடியை மத்திய அரசு இப்போது செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்?
மத்திய அரசுக்கு ரூ.150-க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன்வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனம், மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.400-ஆக விலையை உயா்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.