சென்னையில் தனியார் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையம்(கோவிட் கேர் சென்டர்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும் வீட்டிற்கு வரும் தன்னார்வலர்களிடம் தெரிவித்து முறையாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கம். எனவே இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் தனியார் அமைப்புகளுக்கு கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள், அமைப்புகள் - படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியில் 12 கரோனா பாதுகாப்பு மையங்கள் உள்ளன. மேலும் சென்னையில் இப்போது 12,000 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.