சென்னை: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து மதத் தலைவா்களுடன், தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், ‘மதம் சாா்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு ஏப்.10-ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்த குடமுழுக்கு, திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், புதிதாக திருவிழா, குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது’ எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவா்களுடன், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா். இந்தக் கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் தொடா்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.