தமிழ்நாடு

கோயம்பேட்டில் காலை முதலே வெளியூர்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது

DIN


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட தென்  மாவட்டங்களுக்கு இன்று 5 காலை மணி முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இரவு நேரப் பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில், இரவு 10 முதல் காலை 4 மணி வரை பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நெடுந்தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப பகல் நேரத்தில் விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, வெளியூர் பேருந்து சேவை இன்று காலை 5 மணி முதலே தொடங்கியுள்ளது. கரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

காலை 5 மணி முதல் தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு இரவு 8 மணிக்குள் சென்றடையும் வகையில் பேருந்துகள் புறப்படும் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து நெல்லைக்கு காலை 9.30 மணிக்கு கடைசிப் பேருந்து இயக்கப்படுகிறது.

மதுரைக்கு மதியம் 12 மணி வரையிலும், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஒசூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது, அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய நாள் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT