கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தைப் பொருத்தவரை 5,000 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு செயல் திட்டத்தின்போது ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நடிகா் விவேக்கின் மரணத்தை முன்னிறுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்தும், தமிழகத்தில் உள்ள தடுப்பூசிகளின் இருப்பு குறித்தும் சுகாதாரத் துறை அமைச்சா் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:
தமிழகத்துக்கு இதுவரை 55.8 லட்சம் டோஸ் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 47.05 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 8.8 லட்சம் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.