தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் கிராம தங்கல் திட்டத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் திவாகர், மது பிரகாஷ், சஞ்சய் கல்யாண், ஜீவா, பவன், ராஜ்பிரபு ஆகியோர் கிராமப்புறத் தங்கல் திட்டத்தின்கீழ் இப்பகுதியில் தங்கி இருந்து பயிற்சி எடுப்பதுடன் விவசாயிகளுக்கு விவசாயத்தில் பல்வேறு செயல் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை மாணவர்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து விவசாயி வெங்கடேசன் என்பவரது பப்பாளி தோட்டத்தில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்தனர். பின்னர் இதுகுறித்து விவசாயிகளிடம் விளக்குகையில், ட்ரோனில் எவ்வளவு பரப்பளவு என்று பதிவிட்டால் அதற்கு தகுந்தபடி நேர்த்தியாக மருந்து தெளிக்கும் திறன் கொண்டது.
இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 6 முதல் 8 ஏக்கர் பரப்பளவுக்கு மருந்து தெளிக்கலாம். மேலும் ட்ரோனில் பூச்சி மருந்து தெளிப்பதால், விஷம் தாக்கி பாதிக்கப்படும் விவசாயிகள் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.
இது குறைந்த செலவில் அதிக லாபம் அளிக்கிறது என்று தெரிவித்தனர்.