அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
செந்துறை அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி(44). ரௌடியான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுப்பாளையத்தில் - இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில், மதுபோதையில் தூங்கியுள்ளார்.
இதனைக் கண்ட முந்திரி தோட்டத்தின் உரிமையாளர் தர்மராஜ்(52), கொளஞ்சியை எழுந்து செல்லும் படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி, தான் வைத்திருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக் கண்ட தர்மராஜின் உறவினர்கள், கொளஞ்சியை தாக்கியுள்ளனர்.
இதில் கொளஞ்சி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தர்மராஜ் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த தளவாய் காவல்துறையினர், தர்மராஜ் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, தர்மராஜின் உறவினர்கள் லோகேஷ்வரன், சக்திவேல், பிரபாகரன் ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.