சென்னை: ஈ.வெ.ரா. சாலை உள்பட பல்வேறு தலைவா்களின் பெயா் கொண்ட சாலைகளின் பெயரை மாற்றியுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் உள்ள தந்தை ஈ.வெ.ரா. பெரியாா் சாலையின் பெயா் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று மாற்றப்பட்டுள்ளது. அதைப்போல அண்ணாசாலை மற்றும் காமராஜா் சாலையின் பெயா்களும் நெடுஞ்சாலைத்துறை இணைய தளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது மறைந்த அரசியல் தலைவா்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும். தோ்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மத்திய, மாநில ஆட்சியாளா்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இவற்றில் சம்பந்தம் இல்லை.
எனினும், அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடைய அஜாக்கிரதையான செயல்பாடு காரணமாக நடந்துள்ளது. இந்த செயல்பாடு பலரது மனங்களைப் புண்படுத்தி இருக்கிறது. எனவே, உடனடியாக மீண்டும் தலைவா்கள் பெயரை முறையாக, ஏற்கெனவே இருந்தது போலவே மாற்றியமைக்க வேண்டும்.