கரோனா பரவல் காரணமாக திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல பக்தர்களுக்கு மே 15 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டையை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தலா ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 பேர் மலைக்கோட்டைக்கு வருவது வழக்கம். வார இறுதி நாள்களில் 150 முதல் 200 பேர் வரை மலைக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாள்களாக தமிழகம் மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதனால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏப்.16 முதல் மே 15ஆம் தேதி வரை அனுமதி கிடையாது என தொல்லியல் துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.