காஞ்சிபுரம்: கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசின் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் நகரில் கைலாசநாதர்,சுரகேசுவரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், முத்தீஸ்வரர், மதங்கீசுவரர் என்ற 6 சிவாலயங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் உட்பட 7 கோயில்கள் வரும் மே 15 ஆம் தேதி வரை மூடியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோயிலுக்குள் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் வழக்கம் போல நடைபெறுகிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக காஞ்சிபுரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரக்கூடிய கைலாசநாதர் கோயில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் நகரில் உள்ள 7 கோயில்கள் மற்றும் காஞ்சிபுரம் அருகேயுள்ள தென்னேரி, திருமுக்கூடல், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள புராதனக் கோயில்களும் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது.