விராலிமலையில் அரசு மதுபான கடையை வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டு வந்த கடை ஊழியர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் நடத்திய தாக்குதலில், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி, செந்தில், மேற்பார்வையாளர் மனக்கராஜ் உள்ளிட்டோர் பலத்த காயங்களுடன் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியா, முன்விரோதமா, வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விராலிமலை-திருச்சி நான்கு வழிச் சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மனக்கராஜ் மற்றும் விற்பனையாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு அரசு மதுபான கடை விற்பனையாளரான செந்தில் என்பவர் அந்த கடைக்கு வந்துள்ளார். கடையை பூட்டும் பத்து மணிவரை அவர்கள் உடன் பேசிக்கொண்டிருந்து விட்டு கடையை அடைத்த பின் செந்தில் கிளம்பி கடையை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் செந்திலை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டு கடைக்கு அருகே உள்ள புதர் பகுதிக்கு இழுத்து கொண்டு சென்று கையை பின்னால் கட்டி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் ஒருவரை செந்திலுக்கு காவல் வைத்து விட்டு மற்ற நான்கு பேர் காத்திருந்து கடையில் கணக்கு முடித்து பூட்டி விட்டு வந்த விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையாளர் மனக்கராஜ் ஆகிய இருவரையும் கடையில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள சாலையில் வைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு பின்தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடி மயங்கியுள்ளார். பின்னர் ஐந்து பேரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், கைவிரல் வெட்டுப்பட்டு காயமடைந்த செந்தில் அவ்வழியே வந்தவர்களின் உதவியோடு விராலிமலை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்ற இருவரும் அவ்வழியே வந்தவர்களின் உதவியோடு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில், குறிப்பிடப்படவேண்டியது என்னவென்றால் செந்திலை அந்த கும்பல் தாக்கியது, மனக்கராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் தெரியாதாம்.
இதேபோல் அவர்கள் இருவரைத் தாக்கியது செந்திலுக்கும் தெரியாது என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
முன்விரோதம் காரணமாகவா, பணம் கொள்ளைக்காகவா, இல்லை இதில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற பல்வேறு கோணத்தில் விராலிமலை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.